சிறகை இழந்த பறவை

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


சிறகை இழந்த பறவை பாடும் பாடல் கேட்கிறதா

உன் உறவைத் தேடி உருகும் விழியின் தேடல் புரிகிறதா (2)

இறைவனே என் இறைவனே என் இதயக் கோயில் எழுந்து வா

வாசல் திறந்தேன் வாசல் திறந்தேன் உதய தீபம் ஏற்ற வா


1. உன்னைப் பிரிந்து வாடும் நாட்கள் யுகமாய் மாறிவிடும் - நான்

உந்தன் நினைவில் வாடும் நிமிடம் சுகமாய் ஆகிவிடும்

கண்ணைமூடி உன்னை நினைத்தால் கவலை மாறிவிடும் - 2

உன் கரங்கள் தழுவி நடக்கும் போது களைப்பு ஆறிவிடும்

கண்ணின் மணி போல் காக்கும் தேவா அருகில் இருந்திடுவாய்

நான் காலந்தோறும் உனது நிழலில் வாழும் வரமருள்வாய் -3


2. கடலைத்தேடிப் பாயும் நதியாய் உன்னைத் தேடிவந்தேன் - நீ

ஒளியைத்தேடிச் சாயும் மலராய் என்னைத் தேடிவந்தாய்

தாயைப் பிரிந்த சேயைப்போல தனித்து வாடிநின்றேன் நீ

தாவி அணைத்து அன்பில் நனைத்து நண்பன் ஆகின்றாய்

சோர்ந்து வாடும்பொழுதில் எல்லாம் சொந்தம் தந்திடுவாய்

நான் சாய்ந்து கொள்ள ஏழை எனக்குத் தோள்களாகிடுவாய் -3